11

ஹெலன் கெல்லர் கேம்பிரிட்ஜ் இளம்பெண்கள் பள்ளியில் சேர்ந்தார். இந்தப் பள்ளியில் ஊனமில்லாத மாணவர்கள் பயின்று வந்தனர். இந்தப் பள்ளியில் படிப்பவர்கள் எதிர்காலத்தில் ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்வதற்கு ஒரு திறவு கோளாகக் கருதப்பட்டது. தானும் கல்லூரியில் சேர்ந்து சாதாரண மாணவர்களைப் போல் படிக்க வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளியில் சேர்ந்தார்.

இந்தப் பள்ளி 1883ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது தனியார் பள்ளி. இது ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளி. ஹெலனை சேர்ப்பதற்கு முதலில் தயக்கம் காட்டினர். பின்னர் ஹெலனின் கற்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவரை பள்ளியில் சேர்த்துக் கொண்டனர்.

ஹெலன் கெல்லருடன் ஆனி சல்லிவனும் அமர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்களை ஹெலனுக்கு ஆனி டீச்சர் விளக்கினார். நடத்தப்படும் பாடங்கள் அனைத்தையும் ஹெலனுக்குப் புரியும் வகையில் ஆள் காட்டி விரலால், தொடுதல் முறையில் விளக்கினார். இது ஒரு சாதாரண பணி என்று மட்டும் கருதி விட முடியாது. ஹெலனுக்காக சல்லிவன் படும் சிரமத்தைக் கண்டு வகுப்பு ஆசிரியர்கள் நெகிழ்ந்து போனார்கள். உண்மையில் ஆனி சல்லிவன் ஒரு முன் மாதிரியான டீச்சர்தான்.

வகுப்பறையில் நடத்தப்பட்ட பாடங்களை ஹெலன் கெல்லர் தனது வீட்டில் பிரெய்லி தட்டச்சில் டைப் செய்து கொண்டார். இறுதித் தேர்வில் தட்டச்சு முறையில் தேர்வு எழுதினார். தேர்வில் ஆனி சல்லிவனை அனுமதிக்கவில்லை. ஹெலனுக்கு பள்ளியின் தலைவரே வினாக்களை தொடுதல் முறையில் விளக்கினார். ஹெலன் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றியும் பெற்றார்.

ஹெலனின் உயர்கல்விக்காக ஆனி சல்லிவன் கூடவே தங்கினார். உடன் தங்கி ஹெலனின் தேவைகளையும் பூர்த்தி செய்தார். ஹெலனின் பின்னால் இருந்து கொண்டு, ஹெலனின் அறியாமை இருளைப் போக்கினார். கவிதைகளையும், கட்டுரைகளையும், கதைகள் எழுதும் திறனையும் வளர்க்க உதவினார். சல்லிவனின் உதவியும், ஹெலனின் விடா முயற்சியும் நாளடைவில் அவர் சிறந்த ஒரு பெண்மணியாக மாற உதவியது.