31

ஹெலன் கெல்லர் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டது. 1961ஆம் ஆண்டில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அது மிகப்பெரிய வேதனை. அவர் பொது வாழ்க்கையிலிருந்து விடுபட்டார். இருப்பினும் பார்வையற்றவர்களுக்காக தொடர்ந்து சேவை செய்தார். அவரை உலகம் மறக்கவில்லை. அப்போதும் அவருக்குப் பல விருதுகள் வீடு தேடி வந்தன.

ஹெலன் கெல்லர் தனது 88 ஆவது வயதில் இறந்தார். அவர் உறங்கிக் கொண்டு இருக்கும் போதே ஜுன் 1, 1968ஆம் ஆண்டில் உயிர் பிரிந்தது. ஹெலன் கெல்லரின் உடல் தனது அன்பிற்குரிய ஆசிரியர் ஆனி சல்லிவன் மற்றும் தனது உதவியாளர் பாலி தாம்சன் ஆகியோரின் சமாதிகளுக்கு இடையில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய உடல் வாஷிங்டனில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டது.

நினைவஞ்சலி செலுத்துவதற்காக பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். மாபெரும் அஞ்சலியில் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், காது கேளாதோர், பார்வையற்றவர்களின் ஸ்தாபனங்கள் சார்பாகக் கலந்து கொண்டனர். ஹெலன் கெல்லரால் பலன் அடைந்தவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வாழ்க்கையை ஒரு அவசர நெருக்கடியாக உணர வேண்டும். அப்போதுதான் நமது ஆற்றல் எல்லாம் வலிமை பெற்று செயல்களைத் துரிதமாக செய்ய முடியும் என்று கூறி வந்தார். அப்படித்தான் அவர் செயல்பட்டார். பேச்சு, எழுத்து, சிந்தனை, செயல் என அனைத்து விதங்களிலும் மக்களுக்காக ஹெலன் கெல்லர் பாடுபட்டார். அவரது வாழ்க்கை காது கேளாதவர்களுக்கும், காது கேட்பவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், பார்வை உள்ள அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக உள்ளது. அவருடைய நினைவுகள் என்றென்றும் சமூகத்தில் நிலைத்திருக்கிறது.

ஹெலன் கெல்லர் இறந்த பிறகும் அவரின் தியாகம் நினைவு கூறப்பட்டு வருகிறது. 1980ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லரின் 100 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று ஹெலன் கெல்லர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் ஜுன் 27, 1980 அன்று தேசிய விடுமுறை தினமாக அறிவித்து ஹெலன் கெல்லருக்கு புகழ் சேர்த்தார்.

ஹெலன் நினைவுப் பூங்கா 1971இல் திறக்கப்பட்டது. இந்த நினைவுப் பூங்கா ஹெலனின் ஐவி வீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மார்பளவு ஒரு தகடு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் “I am Your Opportunity. I am Knocking at your door” “நான் உங்களுக்கான வாய்ப்பு. நான் உங்கள் கதவை தட்டிக்கொண்டு இருக்கிறேன்” என எழுதப்பட்டுள்ளது. லயன்ஸ் கிளப் ஜுன் 1, 1971ஐ ஹெலன் நினைவு தினமாகக் கொண்டியாது. அப்போது முதல் லயன்ஸ் கிளப் ஜுன் 1 ஐ ஹெலன் நினைவு தினமாக ஆண்டு தோறும் கொண்டாடுகிறது. அத்தினத்தில் உலக முழுவதும் பார்வையற்றவர்களுக்காக பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் மிகப் பிரபலமாக போற்றக்கூடியவர்களின் பட்டியலை காலப் (Gallup) என்ற அமைப்பு 1999இல் எடுத்தது. அதில் ஹெலன் கெல்லரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பிடித்த முதல் அமெரிக்கப் பெண் ஹெலன் கெல்லர் ஆவார்.

ஹெலன் கெல்லரின் பெயரில் தெருக்களும், பூங்காக்களும், பள்ளிகளும் தொடங்கப்பட்டன. இந்தியாவில் மைசூர் பகுதியில் பார்வையற்ற, காது கேளாதவர்களுக்கான பள்ளியை கே.கே. சீனிவாசன் நிறுவினார். அப்பள்ளிக்கு ஹெலன் கெல்லர் பள்ளி எனப் பெயரிட்டார். உலகின் பல நாடுகள் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவம் செய்துள்ளளன.

ஹெலன் கெல்லருக்கு அக்டோபர் 7, 2009ஆம் ஆண்டில் அலபாமாவில் உள்ள தேசிய சட்டப்பூர்வ ஹாலில் ஒரு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 7 வயது குழந்தையான ஹெலன் கெல்லர் தண்ணீர் குழாய் அருகில் நிற்பது போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஹெலன் கெல்லர் முதன் முதலாக Water என்பதை கற்றுக் கொண்டார். ஆனி சல்லிவன் ஆசிரியர் ஹெலன் கெல்லரின் கையில் W-A-T-E-R என எழுதிக்காட்டியதை நினைவு கூறுவதை இது உணர்த்துகிறது. சிலையின் பீடத்தில் பிரெய்லி எழுத்துக்களில் மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ளது. அதாவது “உலகின் சிறந்த மற்றும் மிகவும் அழகான பொருட்களை பார்க்க அல்லது தொடக்கூட முடியாது, அவைகளை மனதில் கண்டு உணர்ந்தேன்”. இந்த சிலை தான் உடல் ஊனமுற்ற ஒருவருக்காக அமெரிக்காவில் வைக்கப்பட்ட முதல் சிலையாகும். இது உலகில் ஊனமுற்ற ஒருவருக்காக உருவாக்கப்பட்ட முதல் சிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாமும் ஹெலன் கெல்லர் தினத்தையும், ஆசிரியர் ஆனி சல்லிவன் தினத்தையும் கொண்டாடுவோம். அன்றைய தினத்தில் அவர்களின் சேவையை நினைவு கூர்வோம்.