8

ஆனி பணம் பெற்றுக் கொண்டு, வீட்டிற்குச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியராக ஹெலன் வீட்டிற்குச் சென்றார். ஆனியின் பணி என்பது பணம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் வேலையாள் அல்ல. கல்வி போதிக்கும் ஒரு ஆசானாகச் சென்றார். கூர்ந்த அறிவும், பொறுமையும் கொண்டவர். அவர் ஹெலனை புரிந்து கொண்டு அவரை நெருங்குவதற்குச் சில வாரங்கள் ஆனது. ஏனென்றால் ஹெலன் விரக்தியின் உச்சத்தில் கோபக்காரக் குழந்தையாக இருந்தார். ஆத்திரத்தில் பொருட்களைத் தூக்கி வீசுபவராகவே இருந்தார். இப்படி ஒரு கோபக்கார குழந்தையை இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும்.

ஹெலனை நன்கு புரிந்து கொண்ட ஆனி, ஹெலனுடன் நெருங்கிவருவதற்கே சில நாட்கள் ஆனது. ஹெலன் கோபத்தால் ஆனியின் கன்னத்தில் பல முறை அறைந்தும் இருக்கிறார். இதையெல்லாம் ஆசிரியர் சகிப்புத் தன்மையுடன் பொருத்துக் கொண்டார். அதே சமயத்தில் பாசத்துடன் நடந்து கொண்டார். ஆனியின் அரவணைப்பு தாயைப் போன்றதாக இருந்தது. இதனால் இருவருக்கும் இடையில் புரிதல் ஏற்பட்டது. ஹெலனிடம் இருந்த கோபத்தைப் படிப்படியாகக் குறையச் செய்தார். பிறர் பேசுவதை புரிந்து கொள்வதற்கான பயிற்சியளித்தார்.

பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்து கொள்ளும் கலையை கெல்லருக்குக் கற்பித்தார். அடுத்து விரல்களின் உதவியால் சைகை மொழியைக் கற்றுக் கொடுத்தார்.

ஆனி எழுதுவதற்குத் தனது ஆன்காட்டி விரலையேப் பயன்படுத்தினர். அந்த விரலால் ஹெலனின் இடது கையில் எழுதினார். கற்றுக் கொடுப்பவர் ஆள் காட்டி விரலை நீட்டி மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு, கற்பவரின் இடது கையில் எழுதுவதுதான் பார்வையற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் முறையாக இருந்தது.

ஹெலன் வீட்டிற்கு ஆசிரியர் ஆனி வந்த போது அவளுக்கு ஒரு பொம்மையைப் பரிசாக வாங்கி வந்திருந்தார். அந்த பொம்மையிலிருந்து எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஹெலனின் உள்ளங்கையில் முதன் முதலாக D-o-l-l என ஒவ்வொரு எழுத்தாக எழுதிக் காட்டினார். ஹெலனுக்குத் தன் உள்ளங்கையில் எழுதியது மிகவும் பிடித்திருந்தது. விளையாட்டாக அது இருந்தது. ஆனாலும் அது பொம்மை என்பதைக் குறிக்கும் வார்த்தை என்பதைப் புரிந்து கொண்டார். தான் கற்ற அந்த முதல் வார்த்தையை தன் தாயின் கையைப் பிடித்து உள்ளங்கையில் எழுதிக் காட்டினார். அது ஹெலனுக்கும், தாய்க்கும் மிகப் பெரிய மகழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வார்த்தை உள்ளது என்பதை ஹெலனுக்குப் புரிய வைக்க ஆனி முயற்சி செய்தார். அவர் Mug (குவளை) என்பதை எழுதிக் காட்டினார். ஹெலனுக்கு அது பிடிக்கவில்லை. பொம்மையை தூக்கி எறிந்து உடைத்து விட்டார். ஹெலனது கோபம், அவனது பிடிவாதம் பற்றி நன்கு அறிந்திருந்த ஆனி, பொறுமையாக உடைந்த பொம்மையை கூட்டி எடுத்தார். ஹெலனுக்குப் பிடித்தமானவற்றை முதலில் கற்றுக் கொடுப்போம் என்கிற முடிவுக்கு வந்தார்.

ஹெலனுக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க ஆனி எடுத்த முயற்சிகள் மிகவும் வியப்பை ஊட்டுபவையாகவே இருந்தது. ஹெலனுக்கு தண்ணீர் (Water) என்னும் வார்த்தையைக் கற்றுக் கொடுக்க, குழாய்க்கடியில் கையை வைத்து வேகமாக தண்ணீரைத் திறந்து விட்டார். குளிர்ந்த நீர் கையைத் தொட்டுச் செல்லும் போது W-A-T-E-R என்று ஆள் காட்டி விரலால் ஹெலனின் கையில் எழுதினார். அதனை ஹெலனிடம் சொல்லிக் காட்டினார். இது பொருளுடன் விளக்கக் கூடிய வார்த்தையாகும். இது ஹெலனுக்கு நன்கு புரிந்தது. ஒன்றை புதியதாகக் கற்றுக் கொண்டோம் என்பது ஹெலனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனை ஆசிரியரின் கையில் எழுதிக் காட்டினார். ஹெலனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட ஆனிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தன்னுடைய மாணவி ஒன்றைக் கற்றுக் கொடுத்ததை புரிந்து கொண்டு உடனே அதனை எழுதியும் காட்டிவிட்டார். ஆனிக்கும் உற்சாகம் பிறந்து விட்டது. ஹெலனின் பெற்றோர்களும் இதனைக் கண்டு மகிழ்ந்தனர். தன்னால் ஹெலனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை ஆசிரியருக்கு பிறந்து விட்டது.

ஆரம்பத்தில் ஹெலனின் கையில் எழுதியதை அவர் விளையாட்டாகவேக் கருதினார். தான் கற்றுக் கொண்ட எழுத்துக்களை அவரால் பொருட்களோடு தொடர்புப்படுத்த முடியவில்லை. முதலில் தண்ணீருக்கு Water என அவர் கையில் எழுதிய பொழுது அவர் எழுத்துக்களைப் புரிந்து கொண்டார். ஆனால் அது தண்ணீர் என்று தெரியாது. தண்ணீர் குழாய்க்குக் கீழ் கெல்லரின் வலது கையில் தண்ணீர் படுமாறு வைத்து இடது கையில் Water என்று எழுதிக் காட்டினார். அப்போது ஹெலனின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அப்போது தான் முதன் முதலாக ஒரு பொருளைத் தொட்டு உணர்ந்து அதனைக் கற்றுக் கொண்டார்.

தண்ணீர் என்ன என்று தற்போது ஹெலன் புரிந்து கொண்டார். அப்பொழுதுதான் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பொருள் உண்டு என்பதை அவர் உணர்ந்தார். அதன் பிறகு ஒவ்வொரு பொருளையும், அதற்கான வார்த்தையைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஹெலனுக்குப் பிறந்தது. Water என்பதைக் கற்றுக் கொடுத்த உடனே ஹெலன் கையை தரையில் வைத்தார் ஆசிரியர். எர்த் (பூமி) என்று இடது கையால் எழுதிக் காட்டினார். ஹெலன் ஒரு புதிய உலகில் காலடி எடுத்து வைத்துவிட்டார். எர்த் என்பதை எழுதிக் காட்டினார்.

உடனே அம்மா, அப்பா, தங்கை, ஆசிரியர் என வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார். அம்மாவைத் தொட்டு அம்மா என ஹெலன் எழுதிக் காட்டினார். அப்பாவைத் தொட்டு அவர் கையில் அப்பா என எழுதிக் காட்டினார். அன்றைய தினத்தில் சுமார் 30 சொற்களைக் கற்றுக் கொண்டார். பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

கற்பித்தலை வீட்டிற்குள்ளே மட்டும் அல்லாமல், வீட்டுக்கு வெளியேயும் அழைத்துச் சென்று கற்பித்தார். அது ஹெலனுக்கு உற்சாகத்தை ஊட்டியது. செடி, பூ, மரம், காய், பழம், மண், நீரூற்று என்று ஒவ்வொன்றையும் தொட்டுக் காட்டி, கையில் எழுதிக் காட்டினார். இப்படி ஒவ்வொன்றாக ஒரு குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தார். இது சாதாரணமாக கற்பிக்கும் முறை என்றாலும், பார்வையற்ற, காது கேளாத, பேச முடியாத குழந்தைக்குக் கற்பித்தல் என்பது மிகவும் புதுமையானது. ஹெலனுக்குப் புரிய வைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதனை கற்றுக் கொடுக்க சகிப்பும், பொறுமையும் தேவை. தான் எடுத்த முயற்சிக்கு உடனே பலன் கிடைக்கவில்லை என்றாலும், ஹெலன் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டதால் ஆனியால் தொடர்ந்து கற்பிக்க முடிந்தது.

தானே பலவற்றைத் தொட்டுப் பார்த்தார். அதற்கான வார்த்தை என்ன என்பதை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார். ஒருவர் தனது சந்தேகங்களைத் தானே கேட்டு தெரிந்து கொள்வதன் மூலம் தான் புதிய கற்றலுக்கு வழி பிறக்கும். அவர் தோட்டத்தில் உள்ள பூக்களையும், புற்களையும் தொட்டுப் பார்த்து அது என்ன மலர் என்பதையும், அதன் வாசனையையும் தனித்தனியாக பிரித்து உணர்ந்தார். இப்படி இயற்கையையும் அவர் தெரிந்து கொண்டார். வாசனையைக் கொண்டு என்ன மலர், என்ன பழம் என்பதையும் தெரிவிக்கும் அளவிற்கு அவரது கற்றல் இருந்தது.

ஒருவர் தன்னிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். ஆனால் அவரால் அடுத்தவரின் முக பாவனையைப் பார்க்க முடியாதே. ஆனாலும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் பெற்றோர்கள், ஆசிரியர் காட்டும் அன்பை தெரிந்து கொள்ள முடியவில்லை. அவரால் பொருளை தொட்டுப் பார்க்காமல் அதனை உணர முடியாது. அன்பு என்பது பொருள் அல்ல. அதனை புரிய வைப்பதற்கு ஆசிரியர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஹெலனும் Love என்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். அன்பை கையால் தொட முடியாது. ஆனால் இன்பத்தை உணர முடியும் என்பதை தன்னுடைய அரவணைப்பின் மூலமும், தாய், தந்தையரின் அவரணைப்பு மூலமும், இயற்கையின் மூலமும் விளக்கினார். ஹெலனும் தனது அன்பை ஆசிரியை ஆனியி கன்னத்தில் முத்தமிட்டு வெளிப்படுத்தினார்.

ஹெலனுக்குப் புரிந்து கொள்ளும் திறனும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவரிடம் இருந்த கோபம் மறையத் தொடங்கியது. தொட்டு உணர்ந்ததை எழுதத் தொடங்கினார். சிறு சிறு வார்த்தைகளை ஒன்று சேர்த்து ஒரு வாக்கியமாக மாற்றினார். மோப்ப சக்தியால் பொருட்களை உணரும் பாடங்களையும் அவருக்கு ஆனி நடத்தினார். அதுவே குழந்தைப் பருவத்தில் பொருளை கண்டறிய மிகவும் உதவியது.

ஹெலனுக்கு உணவு மேஜையில் உட்கார்ந்து சாப்பிடத் தெரியாது. அவள் தன் இஷ்டம் போல் சாப்பிட்டாள். அவளுக்குக் கோபம் ஏற்பட்டால் தட்டுக்களை தூக்கிப் போட்டு உடைப்பாள். ஹெலனுக்கு உணவு மேஜையில் நாகரீகமாக சாப்பிடுவதற்கு சற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஆசிரியர் ஈடுபட்டார். அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. நாற்காலியில் உட்கார வைத்தால் உட்காராமல் இறங்கிவிடுவார். பெற்றோர்கள் மிகவும் சங்கடப்பட்டனர். அவளை சரியாக உட்கார வைக்க முடியவில்லையே என வருந்தினர். ஆனி சல்லிவன் எடுக்கும் முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை என வருந்தினர். அவள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடட்டும், விட்டு விடுங்கள் என்றனர். ஆனால் ஆனி விடுவதாக இல்லை.

அனைவரையும் உணவு உண்ணும் அறையை விட்டு வெளியே போகச் சொன்னார். அறைக் கதவை தாளிட்டார். ஹெலனை தூக்கி நாற்காலியில் உட்கார வைத்தார். அவள் இறங்கி ஓடினாள். தட்டுகளை எடுத்து எறிந்தாள். ஆசிரியரின் கன்னத்தில் அடியும் விட்டாள். இதையல்லாம் ஆசிரியர் பொறுத்துக் கொண்டார்.

ஹெலன் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அவள் கையில் எதையும் எழுத மாட்டார். அது அவளுக்குக் கொடுக்கும் தண்டனை. இது ஹெலனை வருத்தமடையச் செய்தது. அவள் மன்னிப்பு கேட்டாள். அதன் பிறகு ஹெலன் ஆசிரியர் சொல்வதைக் கேட்டார். பிறகு நாற்காலியில் உட்கார வைத்து உணவை எப்படி நாகரீகமாக உண்பது என்பதை கற்றுக் கொடுத்தார். தனது பொறுமையால், அன்பால் ஹெலனை ஆனி வென்றார். தொடர்ந்து போராடி தனது மாணவிக்கு கற்றுக் கொடுத்தார். ஆனி ஒரு திறமையான நல்ல ஆசிரியராக மட்டும் அல்லாமல், ஒரு வளர்ப்புத் தாயாகவும் நடந்து கொண்டார். பாதுகாவலானகவும், அறிவு புகட்டும் ஆசானாகவும் இப்படி எல்லாருமாக ஹெலன் வாழ்வில் நிறைந்தவராக ஆசிரியர் ஆனி சல்லிவன் இருந்தார். அதனாலேயே ஹெலன் ஆசிரியரின் அன்புக்குக் கட்டுப்பட்டவளாக மாறினார்.

ஆசிரியர் “தொடுதல் மூலம் புரிதல்” வகையில் பாடம் எடுத்தார். கொஞ்சம், கொஞ்சமாகப் புரிந்து கொண்டு அதன்படி சைகை பாவனையில் அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு பதில் கொடுத்தாள். அடுத்தவர் பேசுவதை புரிந்து கொள்வதற்குத் தொடுதல் முறையிலேயே அறிந்து கொள்ளும்படி வழிகாட்டினார் ஆனி சல்லிவன்.