12

ஹெலன் கெல்லர் ராட்கிளிஃப் கல்லூரியின் (Radcliffe college) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1900ஆம் ஆண்டில் கல்லூரியில் சேர்ந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தங்கும் விடுதியான சௌத் ஹவுஸின் பிரிக்ஸ் ஹாலில் தங்கினார். உடன் தங்குவதற்கு ஆனி சல்லிவனும் அனுமதிக்கப் பட்டார். இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும், உடலில் எந்தக் குறையும் இல்லாதவர்களே. ஒரு மாற்றுத் திறனாளி மாணவர்கள் கூட கிடையாது. சராசரி வாழ்க்கை நடத்தும் மாணவர்களுடன் ஹெலன் கெல்லரும் சேர்ந்து விட்டார். படிப்பில் மற்றவர்களிடம் இருந்து தான் சளைத்தவர் அல்ல என்பதைக் காட்டும் ஒரு சவாலாக இது ஹெலனுக்கு அமைந்தது.

எல்லோரும் படிக்கும் பாடங்களை பார்வையற்ற, காது கேட்காத ஹெலன் படிப்பது குறித்து வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது. பிரபலமான அமெரிக்க எழுத்தாளர் மார்க் டாவின் (Mark Tawin) என்பவருடன் ஹெலனுக்குத் தொடர்பு கிடைத்தது. ஹெலனும், மார்க் டாவினும் நண்பர்களானார்கள். இவர் பல நாவல்களை எழுதி பிரபலமானவர். 19ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்த மனிதர்கள் என இருவர்களைத் தேர்வு செய்தால் அவர்களில் ஒருவர் நெப்போலியன், மற்றொருவர் ஹெலன் கெல்லர் என தேர்வு செய்வார்கள் என மார்க் டாவின் கூறினார். அந்தளவிற்கு ஹெலன் கெல்லர் ஒரு திறமைசாலியாக விளங்கினார்.

மார்க் டாவின் நாவல்கள், குழந்தைகளுக்கான கதைகள், வரலாற்று புனைக் கதைகள், சுற்றுப் பயண இலக்கியம், கட்டுரைத் தொகுப்பு, தத்துவங்கள் என பல புத்தகங்கள் எழுதியவர். உலகளவில் இவருடைய படைப்புகள் பேசப்படுகிறது. இவருக்கு பல நண்பர்கள் இருந்தனர். அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வணிக கம்பெனியின் தலைவரான ஹென்றி ஹட்டல்ஸ்டன் ரோஜர் என்பவர் இவரின் நண்பராக இருந்தார். இவர் அமெரிக்காவின் தொழிலதிபர். மிகப் பெரிய கோடீஸ்வரர். மார்க் டாவின் வேண்டுகோளுக்கு இணங்கி ஹெலன் கெல்லரின் கல்லூரி படிப்பிற்கு உதவி செய்ய முன் வந்தார். தனது நண்பரின் மூலம் ஹெலன் கெல்லரின் கல்லூரி செலவுகளை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.

ஹெலனுடன் கல்லூரிக்குச் சென்று அருகில் அமர்ந்து கொண்டு பாடங்களை விளக்கினார் ஆனி சல்லிவன். கெல்லருக்காக ஆனியும் பாடங்களைக் கற்க வேண்டி இருந்தது. ஒரு ஆசிரியர் ஒரு மாணவியின் நலனில் எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதற்கு ஆனி சல்லிவன் ஒரு மிகச் சிறந்த உதாரணம் எனக் கல்லூரி பேராசிரியர்களும் புகழ்ந்தனர்.

கல்லூரியில் ஹெலன் கெல்லர் 1904ஆம் ஆண்டு வரை படித்தார். அவர் படித்த 4 ஆண்டுகளுக்கும் ஆசிரியர் ஆனி சல்லிவன் இவருடைய மொழி பெயர்ப்பாளராய் இருந்து கற்றலை எளிமையாக்கினார். 1904ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லர் இளங்கலை பட்டம் (BA) பட்டம் பெற்றார். மாற்றுத் திறனாளிகளில் உலகிலேயே முதன்முதலாக பட்டப்படிப்பு முடித்தவர் ஹெலன் கெல்லர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஹெலன் கெல்லர் தேர்வு எழுதும் போது ஆனி சல்லிவனை அருகில் இருக்க அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் தேர்வில் ஹெலனுக்கு உதவி செய்யக் கூடும் எனக் கல்லூரி முதல்வர் கருதினார். ஆகவே கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஒருவர் அருகில் இருந்து வினாக்களைப் புரிய வைத்தார். வினாக்களை நன்கு புரிந்து கொண்டு, அதற்கான விடைகளை டைப் செய்தார். ஹெலன் பிரெய்லி தட்டச்சு முறையில் மட்டுமே டைப் செய்வார் என்று கருதி விட வேண்டாம். அவர் மற்றவர்கள் டைப் செய்யும் தட்டச்சு முறையையும் கற்று இருந்தார்.

ஹெலன் கெல்லர் தனது 24ஆவது வயதில் பட்டப்படிப்பை முடித்தார். பார்வையற்ற, காது கேளாத ஒருவர் பட்டம் பெற்றது என்பது உலகளவில் பிரபலமானது. இது பல ஊனமுற்ற, பார்வையற்ற, காது கேளாதவரிடம் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. பலரிடம் இது விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பார்வையற்ற, காது கேளாதவர்களாலும் படித்துப்பட்டம் பெற முடியும் என்கிற எண்ணத்தை உருவாக்கியது. உலகில் பல நாடுகளில் பார்வையற்றவர்களுக்கும் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு சிந்தனையை தோற்றுவித்தது.

இவர் கல்லூரியில் படிக்கும் போது பல மாணவிகள் இவரிடம் நட்புடன் பழகினர். இவருக்காக தொடுதல் முறையில், விளக்கும் கலையைக் கற்றுக் கொண்டனர். இதன் மூலம் ஹெலனிடம் அவர்கள் உரையாடினார்.

தன்னுடன் பயிலும் கல்லூரி மாணவர்கள் தன் மீது இரக்கப்படுவதையோ, அனுதாபப்படுவதையே அவர் ஒரு போதும் விரும்பவில்லை. தன் குறைகளை அவர் பெரியதாகக் கருதவில்லை. மனம் அவருக்குப் பக்குவப்பட்டு விட்டது. இத்தனைக் குறைகளும் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லோரையும் போலவே கல்லுரியில் படித்தார். தனக்கு என்று ஒரு சலுகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அவரின் படிப்பிற்கு கால அவகாசம், கால நீடிப்புக் கொடுக்க முன் வந்த போது அதனை ஏற்க மறுத்து விட்டார். குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே தனது கல்லூரி படிப்பை முடித்தார். எந்த குறையும் இன்றி இருக்கும் சராசரி மாணவர்களை விட சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

அறிவே உலகம், அறிவே மகிழ்ச்சி என்பதை ஆனி சல்லிவன் ஹெலனுக்குக் கற்றுக் கொடுத்தார். சலிக்காமல் புரிய வைத்தார். இந்த உலகில் வாழ்வது அற்புதமானது என்பதையும் விளக்கினார். தனக்கு கல்லூரிக் கல்வி சிந்திக்க எதையும் பெரியதாகக் கற்றுத் தரவில்லை என்றே பின்னாளில் குறிப்பிட்டுள்ளார். பட்டப்படிப்பு அத்துடன் முடிந்து போனாலும் பல விசயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ஹெலன் கெல்லர் பட்டம் பெற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ராபர்ட் ஸ்மித்தாஸ் (Robert Smithdas) என்பவர் பட்டப்படிப்பு முடித்தார். இவர் பெர்கின்ஸ் பள்ளியில் படித்த பார்வையற்ற, காது கேளாத மாணவராவார். இவர்தான் ராட்கிளிஃப் கல்லூரியில் இரண்டாவதாக பட்டம் பெற்ற பார்வையற்ற, காது கேளாத பட்டதாரியாவார். இதன் பின்னர் தான் உலகின் பல நாடுகளில் பார்வையற்றவர்கள் பட்டபடிப்பை படிக்கத் தொடங்கினர்.

ஹெலனுடன் ஆசிரியர் ஆனியும் சேர்ந்தே உழைத்தார். அதன் பயன் ஹெலன் பட்டதாரி ஆனார். ஒரு பார்வையற்ற பெண்ணை பட்டதாரியாக்கிய பெருமை ஆனிக்கும் கிடைத்தது. அதாவது பிரெய்லி எழுத்துக்களை தடவித் தடவி தெரிந்து கொண்டு, அதற்கான விடையை ஆனியின் கையில் எழுதிக் காட்டினார். இப்படி பயிற்சி எடுத்துக் கொண்டார். இதன் மூலம் சரியான பதில்களை அவர் ஆனியின் கையில் எழுதிக் காட்டினார். இந்த பயிற்சியின் மூலம் தனது கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்றார்.