20

ஹெலன் கெல்லர் மாற்றுத் திறனாளிகளுக்காகவே சேவை செய்தார். எல்லோரையும் போலவே மாற்றுத்திறனாளிகளும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். உலகில் வாழும் அனைவரும் சமமானவர்களே என ஹெலன் தனது பேச்சிலும், எழுத்திலும் எழுதினார். அவர்களின் வாழ்க்கை உயர போராடினார். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டங்கள் கொண்டு வர பாடுபட்டார்.

பார்வையற்றோருக்காவும், காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்காக பாடுபடுவதை தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டார். தன் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமையும்படி நடந்து கொண்டார். தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டினார். பார்வையற்றவர்களுக்காக ஒரு தேசிய நூலகத்தை உருவாக்கினார். இதற்காக உலகம் முழுவதும் இருந்து நூல்களைப் பெற்று நூல் நிலையத்தை வளர்த்தார்.

அமெரிக்காவில் போரினால் கண் இழந்தவர்களுக்கான நிவாரண போர் நிதி வாரியம் 1915இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வாரியத்தின் முதல் இயக்குனராக ஹெலன் கெல்லர் நியமிக்கப்பட்டார். 1924ஆம் ஆண்டில் ஹெலன் கெல்லர் நிதியக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. பார்வையற்ற, காது கேளாத ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் சேவை உலகம் முழுவதும் தெரிய வந்தது. பல தொழிலதிபர்கள் ஹெலன் கெல்லர் அறக்கட்டளைக்கு உதவி செய்தனர். சுமார் 1.5 கோடி பணம் நிதியாகக் கிடைத்தது. அதனைக் கொண்டு பார்வையற்றவர்களுக்கு உதவி செய்தார். உலகில் நடத்தப்பட்டு வந்த பார்வையற்ற பள்ளிகளுக்கு நிதி உதவி செய்தார்.

அமெரிக்காவில் பார்வையற்றவர்களுக்காக அலுவலக ஆட்சி மொழியாக பிரெய்லி எழுத்து 1918இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம் ஹெலன் கெல்லர்தான். ஹெலன் கெல்லர் பார்வையற்ற இளைஞர்களுக்காக ஒரு ஏஜென்ஸியையும் ஆரம்பித்தார். லையன்ஸ் கிளப்புடன் உறவு கொண்டு உலகம் முழுவதும் பார்வையற்ற, காது கேளாதவர்களுக்கு கருவிகள் வழங்க ஏற்பாடு செய்தார்.

அமெரிக்காவில் கண்பார்வையற்றோர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் அதிகாரபூர்வ பேச்சாளராக ஹெலன் கெல்லர் நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் எழுச்சி அடையவும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், பார்வையற்றோர் கழகம் வளர்ச்சி பெறவும் பாடுபட்டார். பலருக்கு கடிதம் எழுதி இதனை வளர்த்தார். 1946ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பார்வையற்றோர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கவுன்சிலராக ஹெலன் கெல்லர் நியமிக்கப்பட்டார். உலகளவில் இயங்கும் பார்வையற்றோர் அமைப்பு எதுவாக இருந்தாலும் அதன் பொறுப்புகளில் ஒருவராக இவரை தேர்வு செய்யும் அளவிற்குப் பிரபலம் அடைந்தார். பார்வையற்ற, காது கேளாதோர் பிரச்சனை எதுவாக இருந்தாலும் தீர்த்து வைக்கும் நிபுணராக ஹெலன் விளங்கினார். இங்கிலாந்தில் பார்வையற்றவர்களுக்காக 1932ஆம் ஆண்டில் ஒரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அச்சங்கத்தின் உதவித் தலைவராக ஹெலனைத் தேர்ந்தெடுத்தனர்.

பார்வையற்றோர் கழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஹெலன் சேவை புரிந்தார். இதன் மூலம் பார்வையற்றவர்களுக்கான பேசும் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கான பயிற்சிக் கொடுக்கப்பட்டது. தான் இறக்கும் வரை இந்த அமைப்பின் மூலம் பார்வையற்றவர்களுக்காகப் பாடுபட்டார். பார்வையற்றவர்களை விட காது கேளாதவர்கள் மீதே ஹெலன் அதிகம் அக்கரை காட்டினார். அதைவிட பார்வையற்ற மற்றும் காதுகேளாத ஆகிய இரண்டு குறைபாடு கொண்டவர்கள் மீது மிக அதிகம் அக்கறை காட்டினார். பார்வையற்றவர்கள், பார்வை இழந்தோர்களுக்காக கருவிகள், உபகரணங்கள் வாங்கிக் கொடுத்து உதவினார்.

பார்வையற்றோரின் தலைமை அலுவலகம் நியூயார்க் நகரில் உள்ளது. இங்கு ஹெலன் கெல்லர் பார்வையற்றவர்களுக்காக எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இங்கு அவரின் சேவைகளை தனி கவனம் செலுத்தி பாதுகாத்து வருகின்றனர். அவர் செய்த சாதனைகளை வரிசைப்படுத்தி பார்வைக்கு வைத்திருக்கின்றனர்.