17

மனித குலத்தின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாக உள்ளனர். அரசு முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. நாட்டின் நிறுவனங்கள், வங்கியாளர்கள், நில உடமையாளர்கள் என அனைவரும் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுபவர்களாகவே உள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், உரிமைகள் கொடுக்கவும் மறுக்கின்றனர். அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. தொழில்துறை அடக்குமுறைக்கு எதிராக மனித குலம் இறங்கிப் போராடும் போதுதான் சுகமான வாழ்க்கை நிலை ஏற்படும் என ஹெலன் கெல்லர் 1911 ஆம் ஆண்டில் எழுதினார்.

ஹெலன் கெல்லர் 1912ஆம் ஆண்டில் உலக தொழிற்சாலை தொழிலாளர்கள் அமைப்பில் (Industrial Workers of the world) உறுப்பினராகச் சேர்ந்தார். இந்த அமைப்பு 1905 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கொள்கை ஒரே பெரிய தொழிற் சங்கம் என்பதாகும். தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டும். முதலாளித்துவத்திற்கு எதிராக அணி திரள என்பதாகும். இந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவின் பல பகுதிகளில் தொழிலாளர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்த்தப்பட்டது. ஹெலன் கெல்லர் பாராளுமன்ற சோசலிசம் என்பது அரசியல் சேறு நிறைந்ததாக உள்ளது என்றார். இவர் உலக தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக 1916 முதல் 1918 வரை எழுதினார். நான் ஏன் இதன் உறுப்பினராக சேர்ந்தேன் என்பதற்கானக் காரணத்தையும் இவர் குறிப்பிட்டார். பார்வையற்றவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் மீது பாராமுகமாக உள்ளனர். நான் இந்த அமைப்பில் ஈடுபாட்டுடன் செயல்படும் போது ஊனமுற்றவர்களின் மீது அக்கறையும், அவர்களின் கோரிக்கை மீது மற்றவர்களுக்கு கவனமும் ஏற்படும் என்றார்.

தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றி ஆராய ஒரு விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டபோது இவர் அதன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொழிலாளர்களின் நலன் பற்றி பாராமுகமாக இருப்பது மனித கட்டுப்பாட்டை மீறியதாக உள்ளது எனக் கருதி வந்தேன். ஆனால் அது பொதுவாக முதலாளிகளின் சுயநலம் மற்றும் பேராசை காரணமாகவே இருக்கிறது என்பதை முதன் முறையாக நான் அறிந்தேன் என ஹெலன் கெல்லர் கூறினார். வறுமை பெண்களை அதிகம் பாதிக்கிறது. வறுமைக்குக் காரணம் முதலாளிகளின் பாராமுகமே என ஹெலன் கண்டறிந்தார்.

மசாசூசெட்ஸில் உள்ள லாரன்ஸ் ஜவுளி தொழிலாளர்கள் 1912ஆம் ஆண்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை உலக தொழிற்சாலை தொழிலாளர் அமைப்பு முன் நின்று நடத்தியது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. அதில் அனைத்து ஜவுளி தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஹெலன் கெல்லர் ஆதரவு தெரிவித்தார். ஆதரவு தெரிவித்ததோடு அல்லாமல் இது சோசலிசத்திற்கான போராட்டம் என்று எழுதினார்.