23

ஆனி சல்லிவன் ஹெலன் கெல்லரின் ஆசிரியராக மட்டும் இல்லை. அவர் ஒரு தோழராக இருந்தார். ஹெலனை உன்னதமான ஒரு நிலைக்கு உயர்த்தியவர். ஆனி சல்லிவன் பாதி பார்வையற்றவர். உடல் நலம் குன்றியவராக இருந்தார். ஆனால் ஹெலன் கெல்லரை முன்னேற்றுவதில், தனது வாழ்க்கையை முழுவதும் அவரின் நலனுக்காகவே அர்பணித்தார். அவருக்கு தாயாகவும், ஆசிரியராகவும், நண்பனாகவும், தோழராகவும் இருந்து வழி காட்டினார். இந்த தோழமை 50 ஆண்டுகள் தொடர்ந்தது.

ஹெலனுக்கு பாடம் நடத்துவதற்காக வந்த போது, பணத்திற்காகவும், வயிற்றுப் பிழைப்பிற்காகவும் வந்தவர் எனக் கருதி விட முடியாது. அவர் ஹெலனை கண்டவுடன் அக்குழந்தையின் பரிதாப நிலையைக் கண்டார். தன்னால் முடியும் அளவிற்கு அக்குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். அது மட்டும் அல்லாமல் பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டவராக இருந்தார். ஒரு 20 வயது பெண் ஆசிரியருக்கு இந்தளவிற்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் இருந்தது என்பது ஆச்சரியம் ஊட்டக் கூடியது தான்.

ஹெலனைப் பொருத்தவரை குழந்தைப் பருவத்தில் கரடு, முரடான குழந்தையாக இருந்தார். அவரை பெற்றோர்கள் சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. ஒரு ஆசிரியரை வைத்துக் கொண்டால் ஹெலனை நல்வழிப்படுத்த முடியும் என அவரது பெற்றோர்கள் கருதினர். உண்மையில் நல்வழிப்படுத்தும் ஒரு ஆசானாக ஆனி சல்லிவன் அமைந்துவிட்டார். கோபமும், அடங்காத்தனமும் கொண்ட ஹெலனை தனது பொறுமையாலும், அன்பாலும் சாந்தப்படுத்திவிட்டார்.

உடல் குறைபாடுகள் இல்லாத மாணவர்களுக்கு பாடம் நடத்தி புரிய வைக்கவே பல ஆசிரியர்கள் தடுமாறுகின்றனர். ஆனால் பார்வையற்ற, காது கேளாத, பேசாத குழந்தைக்கு பாடம் நடத்துவது என்பது எளிதான காரியமா? நாம் சிந்தித்துப் பார்த்தால் அது எவ்வளவு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படி ஒரு சவாலை ஏற்றுக் கொண்டவர்தான் ஆனி சல்லிவன்.

ஆனிக்கு திருமணம் ஆனவுடன் கியூன்ஸ் என்னுமிடத்தில் உள்ள பாரஸ்ட் ஹில்ஸ் என்ற இடத்திற்குச் சென்றனர். ஆனி தன்னுடன் ஹெலனையும் அழைத்துச் சென்றார். மூவரும் ஒரே வீட்டில் தங்கினர். அந்த வீட்டில்தான் அமெரிக்க பார்வையற்றோர் அறக்கட்டளையை ஹெலன் ஆரம்பித்தார். 1914ஆம் ஆண்டில் கணவரிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஆனி பிரிந்தார். அந்த ஆண்டிலிருந்து ஆனியின் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அப்போது பாலி தாம்சன் (Polly Thompson) என்பவரை வீட்டில் வேலைக்கு பணியமர்த்தினார். அவர் ஒரு ஸ்காட்லாந்து பெண். அவருக்கு செவிடு மற்றும் பார்வையற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முன் அனுபவம் எதுவும் கிடையாது. அவர் ஹெலனின் தனி செயலாளராக இருந்தார்.

ஆனி சல்லிவனுக்கு உடல் நலம் நாளுக்கு நான் பாதிப்படைந்தது. அவருக்கு மருத்துவ உதவிகளை ஹெலன் செய்தார். ஆனி சல்லிவனுக்கு மருத்துவம் செய்வதற்காக ஐரோப்பாவிற்கும் சென்றனர். அப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஹெலனின் வாழ்க்கையை முன்னேற்றி கல்வி ஒளி கொடுத்த தாய் என ஆனியைப் புகழ்ந்தார்.

ஆனி சல்லிவனின் சிறந்த வேலையைப் பாராட்டி ஸ்காட்லாந்து பல்கலைக் கழகமும், ரூஸ் வெல்ட் நினைவு ஃபவுண்டேஷனும் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தின.

நாளடையில் ஆனி கண் பார்வையை இழந்தார். இது ஹெலனை மிகவும் பாதித்தது. ஆனியின் உடல் நலம் கெட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றார். மயக்க நிலையில் இருந்த ஆனி 1936ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். அவரின் இறப்பு ஹெலனை மிகவும் பாதித்தது. உலகின் பல நாடுகளில் இருந்து ஹெலனுக்கு ஆறுதல் கூறப்பட்டது. ஹெலனின் நிலையிலிருந்து நாம் ஆனி டீச்சரை பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் ஆனி சல்லிவனுக்காக கண்ணீர் வடித்துத்தான் ஆக வேண்டும்.

ஆனி சல்லிவன் அக்டோபர் 20, 1936ஆம் ஆண்டில் நியூயார்க்கில் பாரஸ்ட் ஹில்லில் இறந்தார். அவர் ஹெலன் கெல்லரை உலகப்புகழ் பெறச் செய்த உலகின் தலைச் சிறந்த ஆசிரியை. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 அன்று ஆனி சல்லிவன் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆனி சல்லிவன் இறந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு, ராட்கிளிஃப் கல்லூரி அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு செயற்கை நீருற்றை கல்லூரியில் அமைத்தது. அந்த விழாவிற்கு ஹெலன் கெல்லரை அழைத்திருந்தனர். ஆனி சல்லிவன் தனக்கு முதன் முதலில் கற்றுக் கொடுத்த வாட்டர் என்கிற வார்த்தையை கூறி அனைவரையும் நெகிழச் செய்தார்.

ஆனி இறந்த பிறகு பாலி தாம்சனுடன் ஹெலன் கனெக்டிகட் சென்றார். உலகம் முழுவதும் சென்று பார்வையற்றவர்களுக்காக நிதி திரட்டினர். 1957இல் பாலி தாம்சன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவர் குணம் அடையாமல் 1960ஆம் ஆண்டில் இறந்தார். பாலி தாம்சன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு உதவிட வின்னீ கார்பாலி (Winnie Corbally) என்கிற செவிலியரை வைத்துக் கொண்டார். பாலி தாம்சன் இறந்தப் பிறகு அந்த செவிலியர் ஹெல்லரின் இறுதிக்காலம் வரை உடன் இருந்தார். இப்படி பலர் அவரின் வாழ்க்கையில் தோழமையுடன் இருந்தனர்.