5

ஹெலன் பிறக்கும் போது முழு ஆரோக்கியத்துடனே பிறந்தார். பார்வையும், கேட்கும் திறனும் கொண்டவராகவே இருந்தார். ஒன்றிரண்டு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தார். அவரின் குழந்தைத்தனத்தைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்தனர். தங்களை அம்மா, அப்பா என அழைப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். ஒவ்வொரு குழந்தையும் தங்களைப் பார்த்துப் பேசும் போது மகிழ்ச்சியடையாத பெற்றோர்கள் இருக்கவே முடியாது. தங்களின் குழந்தையின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என நம்பினர்.

ஹெலன் 19 மாதக் குழந்தையாக இருக்கும் போது அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. ஸ்கார்லட் (Scarlet Fever) அல்லது அது மூளைக் காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதினர். இது 4-8 வயதுக்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்குத் தொற்றுகிறது. இதற்கு அக்காலத்தில் தடுப்பூசி கிடையாது. இந்த மூளைக் காய்ச்சல் கடுமையாக இருந்தது. அது குழந்தையின் உயிரைப் பறித்துவிடும் எனப் பயந்தனர். ஆனால் சில நாட்களில் குணமானது. இதன் விளைவாக ஹெலன் பார்க்கும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்தார். பேசும் திறனையும் இழந்தார். தன் பெயரைக் கூட கேட்டறிய முடியாத பச்சிங்குழந்தையின் பரிதாபமான நிலை. தனது உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாத பரிதாபமான ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டது. இப்படி பாதிப்பு நமக்கு ஏற்பட்டால் நம்மால் என்ன செய்ய முடியும். இது மிக மிகக் கொடுமையானது. பார்க்கவும் முடியாமல், பேசவும் முடியாமல், காது கேட்காத நிலை ஏற்பட்டதால் ஹெலன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார். தன் வாழ்நாள் இறுதி வரை இருண்ட வாழ்க்கையை அனுபவித்தார்.

மொழி என்பது ஒரு மனிதனை வளர்த்து எடுக்கும். ஆனால் பேச முடியாத போது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள சைகைதான் உதவும். ஹெலனின் சைகைகளை பெற்றோர்களால் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனால் ஹெலன் வீட்டில் இருந்த சமையல்காரரின் மகள் மார்த்தா வாஷிங்டனால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. அக்குழந்தைக்கு 6 வயது. அவளால் ஹெலன் என்ன சொல்கிறாள், என்ன கேட்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதன் மூலம் ஹெலன் குறிப்பிடும் சைகை மொழிகளில் 60க்கும் மேற்பட்டவற்றை அவரின் பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஹெலனிடம் மார்த்தா வாஷிங்டன் நெருங்கிப் பழகினாள். இரண்டு குழந்தைகளும் வீட்டின் உள்ளேயும், தோட்டத்திலும் விளையாடினார். இது பெற்றோர்களுக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்தியது. ஹெலனும் வேறு ஒரு குழந்தையுடன் விளையாட முடிந்தது.