14

ஹெலன் கெல்லர் படிப்பதோடு நின்றிருந்தால் அவரது வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்திருக்காது. தான் கற்றவற்றை மற்றவர்களுக்கு எழுதி அவர்களை மகிழச் செய்தார். அவர் பல நூல்களை எழுதினார். இவரது எழுத்துக்கள் சாதாரணமானதாக இல்லை. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும், வறுமையில் வாடுவோருக்கும் துணிவைத் தந்தது. பலருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஹெலன் கெல்லர் கல்லூரியில் படிக்கும் போதே 1903ஆம் ஆண்டில் தன் வாழ்க்கை வரலாறு (The Story of my life) என்னும் நூலை எழுதினார். இதனை எழுதுவதற்கு ஜான் மெசி அவருக்கு உதவினார். இந்தப் படைப்பு பெண்கள் சஞ்சிகை (The Ladies Home Journal) என்ற செய்தித்தாளில் ஒரு தொடராக வெளி வந்தது. பின்னர் இது என் கதை என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.

இது ஒரு தலைச் சிறந்தப் புத்தகம், உலகம் முழுவதும் இன்று 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. மராத்தி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஹெலன் படைப்புகளில் இன்றும் தலைச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

உலகில் பார்வையற்ற, காது கேளாத ஒருவர் எழுதிய முதல் புத்தகம் இது. இதன் மூலம் உலகளவில் ஹெலன் கெல்லர் பிரபலம் அடைந்தார். இந்தப் புத்தகத்தை எழுதும் போது அவருக்கு வயது 21. அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தார்.

ஹெலனின் என் கதை என்பது அதிசயமே அசந்து போகும் ஒரு அசாத்தியமான சாதனைக் கதையாகக் கருதப்படுகிறது. பார்க்கிற, கேட்கிற, பேசுகிற சக்தியை இழந்த ஒரு குழந்தை போராடி பேசக்கற்றுக் கொண்டு உலகமே போற்றும் அளவிற்கு உயர்ந்தது எப்படி என்பதை விளக்கும் கதை, ஹெலன் தன்னுடைய ஒவ்வொரு அனுபவத்தையும் விவரித்து எழுதியது. கொடிய வேதனைகளை அனுபவித்த ஹெலன், ஒவ்வொரு படியாக கற்று, தனது வாழ்க்கையை எப்படி முன்னேற்றினார் என்பதை விளக்கும் ஒரு சாகசக் கதையாக உள்ளது. கொட்டும் தண்ணீருக்கு அடியில் கையை வைத்து தண்ணீர் என்பதைக் கற்றுக் கொண்ட பின் அவருக்கு அறிவு என்னும் ஊற்று திறந்தது. அப்போது அவரது வாழ்க்கையில் சந்தோசம் பிறந்தது. அறிவைத் தேடும் ஒரு பெண்ணாக அப்போது மாறினார்.

கொடிய நோயால் பார்க்கும், கேட்கும் பேசும் திறனை இழந்தவர், தன்னுடைய தொடர் முயற்சியால் சாதாரண மனிதர்களை விட அபார ஆற்றல் கொண்ட பெண்ணாக மாறியதை விளக்கும் போராட்டக் கதை. ஒரு ஆசிரியர் கற்றுக் கொடுத்தால் எப்படிப்பட்ட குழந்தையும், சாதனைபடைப்பவராக மாற முடியும் என்பதை எடுத்துக் கூறுகிறது. இது ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மட்டும் எடுத்துக் கூறும் கதையாக மட்டும் அல்லாமல் அவருக்காக உழைத்த ஆனி டீச்சரின் புகழையும் எடுத்துக் கூறும் கதை.

ஆனி டீச்சரைப் பற்றி குறிப்பிடும் போது, என் வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியும் அவருடையதே. என்னுடைய எல்லா சிறப்புகளும் அவருக்கே சொந்தமானவை. அவருடைய அன்பான ஸ்பாரிசத்தால் விழிப்படையாத எந்த ஒரு திறமையோ அல்லது உத்வேகமோ அல்லது ஒரு சந்தோசமோ என்னிடம் கிடையாது.

இது ஒரு கற்பனை கதையல்ல. ஆனால் கற்பனையில் கூட இப்படி நடக்காது என்று பலர் கூறும் விதமாகவே ஹெலனின் வாழ்க்கை அமைந்துள்ளது. விடாமுயற்சியால் உயர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாறு. விடா முயற்சி, முனைப்பு, அக்கறை, துணிச்சல், ஆர்வம், ஊக்கம், விவேகம், உற்சாகம், பாசம், தேடல் என அத்தனையும் கொண்ட பெண்ணின் வாழ்க்கை. அப்படிப்பட்ட திறன் கொண்ட கெல்லரின் வாழ்க்கையை அவரே எழுதியது. இது பலருக்கு தன்னம்பிக்கையையும், சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உலகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.

ஹெலன் கெல்லர் தன்னுடைய 11ஆவது வயதில் ‘பணி அரசன்’ (The Frust king) என்னும் ஒரு சிறு கதையை எழுதினார். அதனை ஆனி சில்லிவன் ‘ஆட்டம்ன் லீவ்ஸ்’ (Autumn Leaves) என பெயர் கொடுத்தார். இக்கதையை பெர்க்கின்ஸ் பார்வையற்றோர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் அனாக்னஸ் (Michael Anagnos) என்பவருக்கு அனுப்பி வைத்தனர். அவர் அதனை பள்ளி ஆண்டு விழா மலரில் 1892 ஆவது ஆண்டில் வெளியிட்டனர்.

அக்கதை மார்கரெட் கான்பி (Margaret Canby) என்பவர் எழுதியக் கதை எனப் பின்னர் தெரியவந்தது. ஹெலன் எழுதிய கதை திருடப்பட்ட கதை என குற்றம்சாட்டப்பட்டது. இக்கதை எப்போது அவர் கேட்டார், படித்தார் என ஹெலனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவரின் அபார ஞாபக சக்தி, அக்கதையில் உள்ளபடியே எழுதி இருந்தார். இது திருட்டுக் கதை எனக் கூறப்பட்டதால் ஹெலன் கெல்லர் மிகவும் வேதனை அடைந்தார். இதனை அறிந்த கதை ஆசிரியர் மார்கரெட் கான்பி இவருக்கு ஆறுதல் கடிதம் எழுதினார். அதன் பின்னர் இவருக்கு எழுத வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்தது.

ஆஸ்திரேலிய நாட்டின் தத்துவவாதியான வில்ஹெய்ம் ஜெருசலேம் என்பவர் ஹெலன் கெல்லரின் இலக்கிய ஆர்வத்தைக் கண்டறிந்தார். ஹெலனை ஒரு எழுத்தாளராக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டார். ஹெலன் 12 புத்தகங்களை எழுதினார். அரசியல், தொழிலாளர் பிரச்சனைகள், பெண்கள் உரிமைகள், அணு குண்டுக்கு எதிர்ப்பு, முதல் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கேற்பிற்கு எதிர்ப்பு என்று பல்வேறு விசயங்களை குறித்தும் எழுதினார். அரசியல், வரலாறு, தத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் எழுதினார். ‘இருட்டிலிருந்து வெளியேறு’ (Out of Dark) என்ற தலைப்பில் பொதுவுடமைக் கருத்துகளைத் தொடர் கட்டுரையாகவும் வெளியிட்டார்.

நான் வாழும் உலகம், நம்பிக்கை ஒரு கட்டுரை, கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆனி சல்லிவன் மேஸி – என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய படைப்புகள். இவை தவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்ற பல கட்டுரைகளை தொடராகவும் எழுதினார். வாராந்திர, மாதாந்திர மற்றும் தினசரி நாளிதழ்களுக்கும் கட்டுரை எழுதினார்.

ஹெலன் 1908ஆம் ஆண்டில் ‘நான் வாழும் உலகம்’ (The World I Live) என்ற நூலை எழுதினார். அவருடைய உலகமானது மோப்ப சக்தியைக் கொண்டும், தொட்டு உணர்ந்து புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளது என்பதை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனது கையே எனது பார்வை என்பது இந்தக் கதையின் சாரம். கையை, பார்க்கும் கை என்கிறார்.

இருண்ட வாழ்வில், இந்த உலகை தனது கையாலும், நுகர்வு சக்தியாலும் உணர்ந்தார். இந்த உலகச் சிறையில் இருக்கும் ஹெலன் தொடு உணர்வு, வாசனை, கற்பனை மற்றும் கனவுகளுடன் அவர் வாழ்ந்த உலகத்தை விளக்கியுள்ளார். நீங்கள் எப்படி கேட்கிறீர்களோ, பார்க்கிறீர்களோ அதனை எனது கையால்தான் நான் பார்க்கிறேன், கேட்கிறேன் என்பதை புத்தகத்தில் தெரிவிக்கிறார். அவர் ஒரு பொருளை பார்வையற்ற, காது கேளாதவர்கள் எப்படி உணர்கிறார்கள், அறிந்து கொள்கிறார்கள் என்பதை தன் வாழ்க்கை அனுபவங்களுடன் இதில் விவரித்துள்ளார். ஒவ்வொரு செயல்பாட்டிலும் கைவிரல்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் உள்ளது. அதனால் தான் உலகை என் கைகளால் பார்த்தேன் என ஹெலன் கெல்லர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகம் 241 பக்கங்களைக் கொண்டது.

ஹெலன் கெல்லரின் இளம் பருவத்தில் ஆனி சல்லிவன், பிலிப்ஸ் புரூக்ஸ் (Phillips Brooks) என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் ஒரு பிஷப் மற்றும் எழுத்தாளர். அவர் ஹெலனுக்கு கிறிஸ்துவத்தை அறிமுகம் செய்து வைத்தார். நான் அவருடன் இருக்கும்போது புதியவற்றைக் கற்றுக் கொண்டேன். ஆனால் அவரின் பெயர் எனக்குத் தெரியவில்லை என்கிறார்.

ஹெலன் 1927ஆம் ஆண்டில் தனது மதம் (My Religion) என்னும் புத்தகத்தை எழுதினார். ஹெலன் ஒரு கிறிஸ்துவர் அல்ல. இமானியல் ஸ்விசன்பர்க் என்பவர் 1688ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் பிரபஞ்சவாதம் என்னும் கோட்பாட்டை பின்பற்றினார். ஹெலனும் இவரின் கோட்பாட்டை பின்பற்றினார். பைபிளை படித்தார். அதில் உள்ளவற்றை ஏற்று பொருத்தம் பார்த்து அதன் போதனைகள் சிலவற்றை மறுத்தார். மதத்தின் கோட்பாட்டை மாற்றுபவர் நகரத்திற்குச் செல்வார்கள் என்கின்றனர்.

ஹெலன் தன்னுடைய புத்தகத்தில் நான் கிறிஸ்துவர் இல்லை. குறுகிய மனப்பான்மைக் கொண்டவர்கள், கிறிஸ்துவர்கள் அல்லாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆன்மா மாற்றத்திற்கு உட்பட்டது. நான் அற்புதமான மனிதர்கள் வாழ்ந்து இறந்ததை அறிந்திருக்கிறேன். இதனை நான் பேகன் (Pagan) நிலங்களில் கண்டேன். நான் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். அனைத்து தேசிய இன மக்களையும் சந்தித்துள்ளேன். எனக்கு பல நண்பர்கள் இதன் மூலம் கிடைத்தனர். ஒவ்வொருவரும் ஒரு சமயக் கோட்பாட்டை கடைபிடிப்பவர்களாக உள்ளனர்.

ஹெலன் சுய சிந்தனையாளராக இருந்தார். அவரது மத நம்பிக்கை என்பது தனது சொந்த வாசிப்புகள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது மத நம்பிக்கைகளை முடிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இவரது ‘மதம்’ என்கிற புத்தகம் 1927ஆம் ஆண்டில் தனது 47 ஆவது வயதில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் 1994இல் Light in my Darkness என்கிற புத்தகமாக மீண்டும் வெளிவந்தது. கெல்லர் தனது முற்போக்கான கருத்துக்களை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதனை மறுபதிப்பாக 1994இல் ராய் சில்வர்மென் (Ray Silverman) என்கிற ஸ்டீவென்பர்க் அமைச்சர் மற்றும் கல்வியாளர் வெளியிட்டார். 2000ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பு வெளி வந்தது.

என் ‘மதம்’ என்கிற புத்தகத்தின் பெயரை Light in my Darkness என மாற்றி வெளியிட்டனர். இந்த வார்த்தை ஹெலன் கெல்லர் எழுதிய ஒரு கவிதையிலிருந்து கிடைத்தது. வாழ்க்கை எனக்கு கொடுத்தது அன்பை வளர்த்துக் கொள்வதற்குத்தான். எனக்கு கடவுள் என்பது சூரியன். அதுதான் பூவின் நிறத்தையும், வாசனையையும் எனக்கு இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. எனது நிசப்தம் குரலாக வெளிப்பட்டது என இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார்.

ஹெலன் கெல்லர் மனித ஆற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார். நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில் ‘நாம் நம்பிக்கை கொள்வோம்’ என்கிற நூலையும் எழுதியுள்ளார். வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை அந்தப் புத்தகத்தில் எழுதினார். கண் பார்வையற்ற ஒருவர் கண் பார்வை உள்ளவர்களுக்கும், கண் பார்வையற்றவர்களுக்கும் கண்ணாக இருந்தார்.

வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்வதற்காகவே பிறந்துள்ளோம். வாழ்க்கை என்பது அவசர கதியானது. அதனை உணர்ந்து நமது ஆற்றலை ஆக்கத்திற்கும், நல்ல செயல்களுக்காகவும் விரைவுபடுத்த வேண்டும். இது போன்ற கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் பரவச் செய்தார்.