13

ஆனி 1905ஆம் ஆண்டில் ஜான் மெசி (John Macy) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருமே ஹெலன் மீது அக்கறை செலுத்தினர். ஹெலனை தங்களுடனே வைத்துக் கொண்டனர். மூன்று பேரும் சேர்ந்தே வாழ்ந்தனர். ஹெலனுக்கு பல வகையில் ஜான் மெசி உதவினார். அவருக்கு உலக நடப்புகளை விளக்கினார். பொதுவுடமை, அரசியல் போன்ற விசயங்களை ஹெலனுக்கு புரியவைத்தார்.

ஆனியின் திருமணம் ஹெலனின் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆசிரியர், மாணவி என்கிற உறவில் எந்தப் பாதிப்பையும் உண்டாக்கவில்லை. மாறாக தம்பதியர்கள் இணைந்து ஹெலனின் படிப்பிற்கும் மற்ற நடவடிக்கைக்கும் பெரிதும் உதவினர்.

ஹெலன் பொதுவுடமைவாதியாக மாறினார். பொதுவுடமை கருத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவரானார். பெண்கள், தொழிலாளர்களுக்காக போராடினார். முதலாளித்துவம், அணுகுண்டு, உலகயுத்தம் போன்றவற்றை எதிர்த்தார். சார்லி சாப்ளின் என்கிற பிரபலமான நடிகருடன் பொதுவுடமைக் கருத்துக்களை விவாதித்தார்.

ஆனிக்கும், ஜான் மெசி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். ஆனால் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அதன் பின்னர் ஆனி சல்லிவன் ஹெலன் மீது முழு அக்கறை காட்டினார். அவரின் வளர்ச்சி மீது முழு அக்கறை செலுத்தினார். இப்போது ஹெலன் உலகத்தைப் புரிந்து கொண்டார். இனி மற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.