19

ஊமையாக இருந்த ஹெலன் கெல்லர் முதன் முதலாக தனது கருத்தை தனது வயது குழந்தையிடம் பரிமாறிக் கொண்டது. மே 26, 1888ஆம் ஆண்டில் தான். அப்போது அவருக்கு வயது எட்டு ஆனி சல்லிவன் விரல்கள் மூலம் பேசும் முறையைக் கற்றுக் கொடுத்திருந்தார். ஹெலன் கெல்லர் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்ற போது தன் வயது கொண்ட பள்ளி குழந்தைகளிடம் முதன் முதலாக நேரடியாகவும், எளிதாகவும் கருத்தை பரிமாறி, பேசிக் கொண்டார். அப்பள்ளிக் குழந்தைகளும் அவருடன் தொடுதல் முறையில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஹெலன் கெல்லர் ஆங்கில எழுத்துகள் 26யும் கற்றுக் கொண்டார். ஆங்கில எழுத்துக்கள் 26க்கும் தனித்தனியாக வெவ்வேறு விரல் நிலைகளையும், உள்ளங்கையைத் தொட்டும் கற்றுக் கொண்டார். பார்வையற்ற, காது கேளாதவர்களிடம் பேசுவதற்கு அவருக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை. மொழி பெயர்ப்பாளர் யாரும் தேவை இல்லை. எந்தவிதக் கவலையும் இன்றி, தயக்கமின்றி நேரிடையாக பேச முடிந்தது. தன்னுடைய சொந்த மொழியில், பார்வையற்ற, காது கேளாதவர்களிடம் பேசுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஹெலன் கெல்லர் பேசக்கற்றுக் கொண்டார். அவரை மற்றவர்கள் முன்னிலையில் பேச வைக்க வேண்டும் என ஆனி டீச்சர் முடிவு செய்தார். ஆனி ஒரு சிறந்த பேச்சாளரும் கூட தன்னை போல் ஹெலனையும் ஒரு மேடை பேச்சாளராக மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டார். நியூ ஜெர்சியில், மோன்டேக்ளேர் என்னுமிடத்தில் ஹெலனை முதன் முதலாக மேடையில் பேச வைத்தார். ஹெலன் கெல்லர் முதன் முதலாக பிப்ரவரி 1913ஆம் ஆண்டில் பேசினார்.

முதன் முதலாக ஹெலன் பேசும் போது மிகவும் பயந்துவிட்டார். ஆனால் எப்படி சுருக்கமாகவும், தெளிவாகவும் மேடையில் பேச வேண்டும் என்பதை ஆனி கற்றுக் கொடுத்தார். ஒரு வழியாக ஹெலனை மேடையிலும் ஏற்றி விட்டார். என் உடல் நடுங்கியது. எனது மனசு உறைந்து போனது. எனது இதயத்துடிப்பு நின்றுவிட்டது போல் இருந்தது. நான் என்ன செய்ய வேண்டும், எனக்குள் ஏற்பட்ட தயக்கத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என ஆனியைத் தொட்டார்.

ஹெலன் தனது விரலை ஆனியின் உதட்டில் வைத்து காட்டி எப்படி உதட்டு அசைவைக் கொண்டு வாசிக்க முடியும் என பார்வையாளர்களிடம் காட்டினார். ஆனி மெதுவாக ஹெலனின் கையைப் பிடித்து அழுத்தி தடவி பேசுமாறு தூண்டினார். ஆனி ஒவ்வொரு வார்த்தையாக ஹெலனுக்குச் சொல்ல பார்வையாளர்கள் புரிந்து கொள்ளுமாறு பேசினார். ஆனால் ஒன்றைச் சொல்ல முடியாமல் தடுமாறினார். இருப்பினும் தட்டுத் தடுமாறி பேசினார். ஹெலன் தனது உரையை பேசியவுடன், அவரை சுற்றி பார்வையாளர்கள் கூடினர். கையை பிடித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அவர் மேடையை விட்டுக் கீழே இறங்கினார். அவர் மேடையில் பேசினாலும் அவருக்கு அது தோல்வி என்றே கருதினார். அவர் அடக்க முடியாமல் கண்ணீர்விட்டார். இது அவருக்கு மேடையில் கிடைத்த முதல் அனுபவம். இது ஆனி இதை ஒரு வெற்றி என்றே கூறினார். இதுதான் ஹெலனை தொடர்ந்து 50 ஆண்டுகள் மேடையில் பேச வைத்தது.

ஒவ்வொரு பொதுக் கூட்டத்தில் ஹெலன் பேசும்போது கலந்து கொண்ட பார்வையாளர்கள் யார், அவர்களுக்கு எந்த தகவலைக் கொடுக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே கண்டுபிடிக்க முயற்சி செய்வார். அவர் பார்வையாளர்களின் நலன்கள் மற்றும் தேவையைப் பொருத்து ஆர்வத்துடன் அவர்கள் உற்சாகம் அடையும் வகையில் பேசினார். குறிப்பாக ஏழைகள், இளைஞர்கள், பார்வையற்றவர்கள், காது கேளாதோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். ஹெலனின் இலக்கு இவர்களின் வாழ்க்கையை முன்னேறும் வகையிலேயே இருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளை ஆனி சல்லிவன் மூலம் தெரிந்து கொண்டு அதற்கான பதிலை அளிப்பார். கலந்து கொண்ட பார்வையாளர்கள் இவரின் பேச்சுத் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர். இவரின் திறமையைக் கண்டு பிரமிப்பும் அடைந்தனர்.